Saturday 12 April 2014

survey: சமூக ஊடகங்களில் தமிழ்


சிங்கப்பூரில் வசிப்பரும் தமிழ் தெரிந்தவர்களும் இதைச் செய்யலாம்.

https://www.surveymonkey.com/s/DVC57ND

நன்றி

Tuesday 10 December 2013

கண்ணுக்குக் கண்ணாக - சிறுகதை


இயற்கையின் அழகைக் கெடுப்பது போல, விண்ணில் தெறித்த மின்னல் அங்குள்ள நட்சத்திரங்களைப் பயமுறுத்தியது. அன்னையின் சேலையில் ஒளிந்து கொண்ட பிள்ளைகளாய் மேகத்தின் போர்வையினுள் அந்த நட்சத்திரங்கள் மறைந்து கொண்டன. இடியின் சத்தத்தைக் கேட்டு மிரண்டு போனவன் என் கற்பப் பையை ரவி மெல்ல உதைத்தான். அந்த அடை மழையிலும் அவனின் முனவல்கள் என் செவிகளுக்கு எட்டின. பயங்கரமான பேய் மழையின் இரவில், தனியாக வசிக்கும் எனக்கு ரவியின் அசைவுகளும், உதிரத்துடன் கலந்த இன்ப உணர்வும் உறுதுணையாக இருந்தது. ஆனால், இந்த இடியோசை அவனை எந்த விதத்திலும் தாக்காத படி, என் உள்ளுணர்வை அவனுக்குத் தாலாட்டாகக் கொண்டு, என் உதிரத்தையே போர்வையாக அவன் மீது அணைத்துக்கொண்டேன்.
_____________________________________________________________________________________
பருவங்கள் மாறின
அம்மா! உனக்கு எத்தன தடவ சொன்னாலும் புரியாதா? உங்கள பார்க்கவே வெறுப்பாக இருக்கு. அதவிட இந்த ஒத்தக் கண்ணு, இன்னும் அறுவறுப்பா இருக்கு. படிச்சுப் படிச்சு சொன்னேனே! ஸ்கூலுக்கு வராதீங்க, ஆசிரியர வந்து பார்க்காதீங்கனு! எவ்வளவு தடவ சொன்னாலும் உங்க மண்டையில ஏறாதா? கண்ணாடிய எடுத்துத்தட்டுதான் என்னோட மார்க்ஸ்ஸ பார்க்கனும்மா? வீட்டுல நான்வந்து கொடுக்க மாட்டேனா? தலை எழுத்து, கை எழுத்த நீங்க தானேபோடனும், அப்ப பார்க்கலாம்ல. உயிர வாங்கறத்துக்குனே வந்திருக்கீங்க. தலையெழுத்து! இந்தக் கொடுமைய நான் பார்க்கறத்துக்குப் பதிலா என்ன பெக்காம இருந்திருக்கலாம்.
அவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டியாகப் பாய்ந்தாலும் அவன் கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது என்ற ஒரே நோக்கிலே, எனக்குள் இருந்த கோபதாபங்களை அடக்கிக்கொண்டேன். என்  அனைத்து உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு என் தனிமையை நாடிச் சென்றேன். வெளியில் காட்ட முடியாத குமுறல்களை வாயில்லாத குழந்தையைப் போல் என்னுள்ளே அழுதுகொண்டிருந்தேன். 
ஆம், நான் ஒற்றைக் கண் படைத்தவள்தான். அழகில்லாதவள்தான். ஆனால் போன ஒற்றைக் கண்ணின் கதையை நான் அவனிடம் எப்படிச் சொல்வேன். என் கண்ணை மூடி, அவன் கண்ணைத் திறந்து வைத்தேன். என் அழகை அழித்து அவனுக்கு அழகூட்டினேன். சமுதாயம் முன் நான் அவலமாக நின்றேன். என்ன இருந்தாலும் எல்லாம் என் மகனுக்குத் தானே. அவனுக்காக என் உடல் தசை, நரம்பு, உருபு என்று எதை அழித்துக் கொள்ளவும் தயங்கமாட்டேன்.  என்னை ஏளனப் பார்வையோடு பார்க்கும் சமுதாயத்தை எதிர்க்க என் மகன் ஒருத்தனே போதும். அவனின் பலத்தை நம்பியே நப்பாசையுடன் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவனும் என்னைத் துட்சமாக நினைத்துவிட்டானே! ஐய்யோ! என் சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டது.
காலங்கள் உருண்டோட அவனும் என்னை விட்டு தூரம் செல்வதை உணர்ந்தேன். இரவில் ரவி கண்ணுறங்கும் போது மட்டும், அவனை கதவோரத்திலிருந்து பார்த்து ரசித்தேன். அவன் கேசத்தைக் கோத என் இரு கரங்களும் கெஞ்சின. என் மார்பில் கட்டியணைத்த தங்கத்தைத் தாலாட்டுப் பாடி கண்ணுறங்க வைத்த நினைவுகள் என் மேனி முழுவதையும் இன்பத்தில் வருடியது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தும் எங்கே, நான் ஏதாவது செய்து, அவன் விழித்துக் கொண்டு துன்புறுவானோ என்று அன்பைப் பொழிய முடியாதவளாய் நிற்கதியற்று நின்றேன். ஆயினும், இந்தப் பாவி மனத்திற்கு அவனை ஒரு போதும் வெறுக்கத் தெரியவில்லை. என் கனவு, லட்சியம், பலம் அனைத்தும் ரவிதான் என அவன் மகிழ்ச்சியாக இருப்பதையே நான் தூரத்திலிருந்து விரும்பி வாழ்த்தினேன். என்னை அம்மா என்று மீண்டும் ரவி அழைத்து என்னிடம் ஓடி வந்து கட்டியணைக்கும் நாளை கற்பனை செய்த என் விழி ஏக்கத்தில் காத்துக்கொண்டிருந்தது.
என் எண்ணங்களை யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்த நாட்கள் அவை. என் மனவலைகளைக் கொட்டித் தீர்க்க எனக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய டைரீ எழுதும் பழக்கமே.  
_____________________________________________________________________________________
ஜனவரி - 24 – 1999
அன்று ரவியின் பிறந்தநாள். ஒரு கையில் கேக்கும் மறு கையில் பரிசுமாக ரவியின் வருகைக்காக வீட்டில் ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தேன். இரவு மணி பத்தாகியும் அவன் வீடு திரும்பவில்லை. பதற்றத்தில் அக்கம் பக்கம், பள்ளி ஆசிரியர் என தெரிந்தவர்களிடம் கேட்டேன். ஆனால் ஒரு செய்தியும் அறிய முடியவில்லை.
அவன் நண்பர்களிடம் அவனைப் பற்றி விசாரிக்கவும் முடியாமல் துடியாய்த் துடித்தேன். நள்ளிரவு பன்னிரண்டு, முதல்முதலாக, அந்தச் சுவருகள் என் கதரல்களை ஆழமாகக் கேட்டிருக்கும். கண்களில் தூக்கம் இல்லாமல், அவன் வருகையை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தேன்.
வடித்தக் கண்ணீரின் ஈரப்பசை கன்னத்தில் காயும் முன்னமே, ரவி வரும் சத்தம் கேட்டது. அவனைக் கண்டவுடன், என் உடலை விட்டு என் உள்ளம் அவனைக் கட்டியணைத்துக்கொண்டது. தலை முதல் கால் வரை அவன் நலமாகத்தான் இருக்கிறானா என்பதை அந்த ஒற்றைக் கண் அலசியது. உள்ளத்தின் ஆத்மாவிலும் ஒற்றைக் கண் என்னை விடவில்லை.
மெல்லிய குரலில், ஏன் தாமதம்?’ என்று கேட்டேன். நீ கொஞ்சம் பேசாம இருக்கியா! நானும் பெரியவனா ஆய்டேன். நான் எங்க போறேன், எப்படி இருக்கேன்னு பார்க்க வேணாம். இனிமேல அப்படித்தான்! ஆனா, நீ ஒரு விஷயத்துல மட்டும் கவலையே பட வேண்டா. நல்லாபடிச்சு நல்ல வழில போய் எவ்வளவு சீக்கிரம் உன்ன விட்டு போ முடியுமோ, அப்பதான் எனக்கு நிம்மதி. இன்னிக்காவது என்னை சும்மா விட்டுடு. கேள்வி கேட்டு எரிச்சலாக்காதே! என்று கத்திவிட்டுச் சென்றான்.
மீண்டும் மீண்டும் துன்படுத்தப் பட்ட மனம், மேலும் வாடி, குமுறியது. பிள்ளை மனம் கல்லாக இருந்தாலும் பெற்ற மனம் பித்தாச்சே. ரவியின் வருகையே எனக்குத் திருப்தி என அவன் கண்ணுறங்கும் வேளையில் பரிசை அவன் மேசையில் வைத்தேன்.

_____________________________________________________________________________________
டிசெம்பர் – 31 – 2001
     புத்தாண்டை வரவேற்கும் பரபரப்பில் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன். சமையலறையில் ஒரு கடிதத்தைக் கண்டென். அதைப் பிரித்துப் படித்துப் பார்த்ததில் என் இதயத்தைத் திருடும் எமனின் கயிரு போன்றே இருந்தது. என் கண்ணன், இனிமேல் என்னைக் காண வரமாட்டான் என்றும் தேட வேண்டாம் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் நிம்மதி என்ற கையெழுத்தும் சேர்க்கப்பட்டது.
_____________________________________________________________________________________
அன்றிலிருந்து பல ஆண்டுகள் காத்திருந்தேன். என்னிடம் என் கண்ணன் ரவி வந்துவிடுவான் என்று மணல் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு இருட்டறையில் காத்திருந்தேன்.
வயதாகிவிட்டது என்பதனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். அருகில் உள்ள கோபீத்தியாமில் பாத்திரம் தேய்ப்பவளாகச் சேர்ந்தேன். கிடைத்த அறுநூறு வெள்ளியைக் கொண்டு அதே வீட்டில் நிம்மதியற்று வாழ்ந்தேன்.
_____________________________________________________________________________________
ஜூலை - 10 – 2011
பாத்திரங்களைத் தேய்த்து தேய்த்து காய்ந்து போன கைகளுக்கு ஓய்வு தருவதற்காக அருகில் உள்ள நாற்கலியில் அமர்ந்துகொண்டேன். ஏனோ அன்று என் மனம் ரவியைப் பற்றிய ஏக்கத்திலேயே தவித்துக்கொண்டிருந்தது. என் அருகில் அவன் இருப்பது போன்ற உணர்வு என்னுள் ஊடுரிவிக்கொண்டிருந்தது. திரும்பிப்பார்த்தேன். என் ரவியின் கண்களைப் பார்த்தேன். பல பேருடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். நல்ல ஆடை உடுத்தி, பெரிய ஆளின் தோரணையில் இருந்ததைப் பார்த்து கண் குளிர்ந்தேன்.
வேலையை விட்டு விட்டு அன்று நாள் முழுவதும் அவன் பின் தொடர்ந்தேன். அவன் சாங்கி விமான நிலையத்தில் ஒரு பெரிய பதவியில் இருப்பதை அங்குள்ளவர்கள் சிலர் கூறினர். அவன் வீடு செங்காங்கில் இருப்பதையும் கண்டேன். அன்றிரவு அந்தப் பேட்டையின் அடியில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மீண்டும் கனவுக் கோட்டைகளைக் கட்டத் தொடங்கினேன். மணி இரவு எட்டு இருக்கும். ரவி, அவன் மனைவி, ஒரு நான்கு வயது பையன் என மூவரும் வெளியே சாப்பிடச் சென்றனர்.
அழகான மனைவி, ரவியின் சாயலில் நான்கு வயது பையன் என அழகான குடும்பத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து போனேன். அவர்களை மெல்ல பின் தொடர்ந்து, தூரத்திலிருந்து ரசித்தேன். அவ்வழியே சென்ற ஒரு முதியவர் தடுக்கி விழுந்தார். அவரைத் தூக்கிக் கைக்கொடுத்த ரவியைக் கண்டு பூரிப்படைந்தேன். என்னை ஏற்றுக்கொள்வானோ என்ற விபரீத ஆசையில் அவர்கள் முன் நின்றேன். அப்பொழுது, ரவியின் மகன், அம்மாவிடம் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டான். அம்மா! பயமா இருக்கு .. பயமா... கண்ணு.. இல்ல என்று கூறிய வார்த்தைகள் என் முகத்தைக் கண்டந்துண்டமாகக் கழித்தது போன்ற உணர்வு. ரவி.. என்று கூறுவதற்கு முன்னால், அவன் அவ்விடத்தைவிட்டு ஓடிவிட்டான். ஆனால், அவன் கண்களில் இருந்த வெறுப்பை நான் கண்டேன். தலை குனிந்தபடியே நொந்து வீட்டிற்குச் சென்றேன்.
_____________________________________________________________________________________
என் விதியை நினைத்தபடியே மீண்டும் என் வீட்டின் நான்கு சுவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுநாள் தபால் பெட்டியில் ஒரு வரவேற்பு கடிதத்தைக் கண்டேன். ரவி படித்த பள்ளியில் நூறாண்டு விழா நடைபெறவுள்ளது என்றது அந்தக் கடிதம். அதை அவன் தற்போது வசிக்கும் முகவரிக்கு அனுப்ப தபால் நிலையத்திற்குச் சென்றேன். அங்கே ரவியின் மனைவி வேலை செய்வதைக் கண்டேன்.
அன்று நடக்கவிருப்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிலையத்தில் உள்ள விளக்கை சரி செய்துகொண்டிருந்தவன் ஒருவன் ஏணியில் ஏறி பிடித்துக்கொண்டிருந்த கண்ணாடியைப் பட்டென்று கீழே போட விருந்தான். அது விழுந்து சிதறியது. அந்தக் கண்ணாடிச் சில்கள் அவளின் கண்ணில் குத்தாமல் இருக்க அவளை மறைத்து முன் நின்றேன். விளக்கின் கண்ணாடி என் மண்டையில் விழுந்தது. என் உணர்வுகள் என்னைவிட்டு மெல்ல பிறிந்து கொண்டே சென்றது.  
_____________________________________________________________________________________
அங்குள்ளவர்கள் தாக்கப்பட்ட முதியவரை அருகிலுள்ள தான் தொக் செங் அவசரப் பிரிவில் சேர்த்தனர். அவருக்குத் துணையாக ரவியின் மனைவி ஜெஸியின் குரல் மட்டுமே அப்பிரேஷன் அறை வரை அவரை தொடர்ந்தது.


_____________________________________________________________________________________
ஜெஸி! என ரவி பதற்றத்துடன் மனைவியைப் பார்க்க ஓடி வந்தான்.
அவள் ரவியின் கண்களை ஊற்றுப் பார்த்து நடந்தவற்றைக் கூறினாள். சிகிச்சையை முடித்த டாக்டர் அப்பொழுதுதான் அறையைவிட்டு வெளியேறி ஜெஸியின் பெயரை அழைத்தார்.  
நீங்கள் அழைத்து வந்த பேஷண்டின் நாடித் துடிப்பு மெதுவடைந்து கொண்டே வருகிறது. அவரின் உறவினர்களைக் கண்டுபிடித்து சொல்லவேண்டும். நீங்கள் வேண்டுமென்றால் அவரை உள்ளே போய் பார்க்கலாம், என்று கூறிவிட்டுச் சென்றார். 
தன் மனைவிக்காக ஒருத்தர் தன் உயிரைப் பணையம் வைத்ததை ரவியினால் நம்ப இயலவில்லை. சுயநலமாக இருக்கும் இக்காலக்கட்டத்தில், இப்படிப்பட்ட மனித நேயமா? என்று அவனுக்குள் ஒரு வியப்பு எழும்பியது. தன் பாதி உயிரைக் காப்பாற்றியத் தெய்வத்தைக் காண, துடித்தவன் கதவைத் திறந்தான்.
பார்த்தான், திகைப்படைந்தான். நா வறண்டு போனது. கண்களில் ஒரு துளி கண்ணீர் பூமியை விழும் முன் அவள் உயிர் பிறிந்தது.
___________________________________________________________________________________

அவனுக்குள் அவள் வாழ்கிறாள் என்ற கண்களின் ரகசியம் ஒருநாள் கண்டுகொள்ளும்....

ருத்திராட்சப் பூனையின் ஆசை



ருத்திராட்ச மாலை கையிலே
எண்ணிக்கொண்டு ஜபித்தான்
கடவுளை நினைத்து


உன்னைச் சரணடைந்தேன்
என்று பாடியே
அவன் மக்களை வசீகரித்தான்


கண்களில் வலைகள் வரைந்து
தன் புகழ் பாட வைத்தான்


பாட்டின் ஓசையிலே
ஆசை தூண்டியதோ


தன் புகழ் பரவியும்
ஏனோ இதயம் துடிக்கிறதோ


பெண்ணைக் கண்டு
அவன் மனம் ஏங்குதடி


ஆசைக் கொண்டு
வசியம் செய்தானடி


அவள் தன் பக்கம்
கடவுளை மறந்தான்


காம ஆசையில்
தன்னை மறந்தான்


மறந்து முக்தி அடைந்தான்
 அவன் சில்மிஷம்

இன்று நம் கையிலே
 நப்பாசைப் பட்டு

மீண்டும் தன்னை மறந்தான்

Sunday 15 September 2013

பாரதியார் - பாரதிதாசன் விழா 2013


 
பாரதியார் - பாரதிதாசன் விழா

நேற்று மாலை 6 மணியளவில் இவ்விழாவைத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நடத்தியது. இதற்குத் தலைவராக திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள், சிறப்பு விருந்தினராகத் திரு இரா தினகரன் அவர்கள், நியமன நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் சிறப்புரை வழங்க திரு சி பாண்டித்துரை அவர்கள் ஆகியோர் சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்புரை வழங்கிய திரு சி பாண்டித்துரையே என் மனக்கண்ணில் நிற்கிறார். இவர் மலேசியத் தொலைக்க்காட்சிப் புகழ், உலகலாவிய தமிழ் இலக்கியப் பேச்சாளர் மற்றும் வழக்கறிஞர் என பல துறைகளில் சகலகலா வல்லவராக இருக்கிறார். ஆனால் சற்று உற்றுப் பாருங்கள். இவர் பணி முழுவதும் பேச்சை சுற்றியே இருக்கிறது. இவர் சொற்றிறன் பெற்றவர். இவரின் நாவில் தமிழ் அமிழ்தமாக பொழிய பல லீலைகளை நிகழ்த்திக் கொண்டே நம் செவிகளுக்கு இன்சுவை விருந்தாக இருந்தது.

தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே என்பதற்கு இணங்க பாரதியார் – பாரதிதாசன் இருவரும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் ஆற்றிய பங்கை நன்கு எடுத்துரைத்தார்.

பாரதி ஒரு சாதாரண கவிஞரா? மகாகவியா? என்று நம்முள் கேள்வி எழுப்பி ஒரே பாட்டில் அவரின் பெருமையை நம் மண்ணில் பரப்பினார் சிறப்புப் பேச்சாளர்.

‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’

சிந்து எங்குள்ளது? வடக்கில் சரி


‘சேரநன்னாட்டிளம் பெண்களுடனே’

வடப்பகுதியிலிருந்து அப்படியே கீழ் புறம் நோக்கி தென்நாட்டான சேரன் ஆண்ட பூமியை எடுத்துரைத்து, பின்பு


‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று

ஆந்திர தேசத்தில் உள்ளவர்களின் நலனில் அக்கறைக் கண்டார். இந்தியாவில் உள்ள அனைத்தவரையும் ஜாதி மதம் ஏதும் பாராமல் வாழ்ந்தவர் மகாகவி பாரதி.

 

 

‘கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்’

என்றும் ஒவ்வொரு நிலங்களின் பெருமைகளைப் பாடியவாரே அடுத்த வரிகளையும் சேர்த்துக் கொள்கிறார்.

‘சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்’

தன் நாட்டு நீரை தனக்கென்று பயன்படுத்த விரும்பாமல் ஏனைய நாடுகளுக்கும் போய் சேர வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டதாலும் அவர் மகாகவி பாரதியார் ஆவார்.

இவர் மண்ணுக்கும், பெண்ணுக்கும் மற்றும் ஜாதி கொடுமைகளுக்கும் விடுதலை பெற்றுத் தருவதற்குக் கடுமையாகப் புரட்சி கொண்டார்.

ஜாதி இல்லையடி பாப்பா என்ற பாடல் கூட மறை முகமாக பெரிய பாப்பாக்களுக்குத்தான் எடுத்துரைத்துள்ளார் என்ற உண்மையைத் தயங்காமல் பேசினார் சிறப்புரையாற்றியவர்.

இவர் பேச்சில் நான் கண்ட பல தகவல் துளிகளிலிருந்து ஒன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

துரைசாமி, துரைசாமி என்று மலேசியாவில் வாழும் தோட்டத்துக்காரர்களுக்கு குலசாமியாகத் துரைசாமி என்ற ஒரு வெள்ளை சிலை உள்ளது. அது உண்மையிலேயே வெள்ளைக்காரரைக் கும்பிடும் சிலையாகவே இருந்துவந்தது. அந்த அளவுக்கு அடிமைத்தனம் குடியிருந்தது.

இப்படியே வாழ்வின் உண்மை ரகசியங்களை நகைச்சுவையுடன் போட்டுடைக்கவே, அரங்கத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து சிரித்தோம். இவர் பேச்சைக் கேட்க நான் மீண்டும் விரும்புகிறேன். அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.

இந்த நிகழ்வைச் சிறப்பாக வழிநடத்திச் சென்ற ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி.

 


 

Saturday 14 September 2013

எழுத்து


தமிழ் எழுத்துகளில் வளைவுகளும் சுழிவுகளும் மிகுதியாக இருப்பதற்குக் காரணம் என்ன? நம்முடைய முன்னோர்கள் பலகையிலும் காகிதத்திலும் எழுதவில்லை. பனை ஓலையில் இரும்பு எழுத்தாணிகொண்டு எழுதினார்கள். அதில் எழுதும்போது, ஓலை கிழியாமல் இருக்கவேண்டுமானால், இப்படி வளைவுகளும் சுழிவுகளும் இருந்தால்தான் எழுத முடியும்.


திருவள்ளுவர் எழுதிய முறை வேறு. நம் எழுத்துகளைப் பார்த்துவிட்டு, இவை வேறு மொழியைச் சார்ந்தவை என்று கூட எண்ணலாம். மரம் என்பதை ப்ரப் என்று நாம் படிப்போம்.

ம என்ற எழுத்தைப் போலவே, பல எழுத்துகள் உருவம் மாறியுள்ளன. தொல்காப்பியம் என்ற பழைய இலக்கண நூலில் எ ஒ என்ற இரண்டு எழுத்துகளுக்கும் புள்ளி உண்டு என்று சொல்லியிருக்கிறார். புள்ளி இல்லாவிட்டால் அவற்றை ஏ ஓ என்று பழங்காலத்தில் படிப்பர். எழு என்று எழுதுவதை அந்தக் காலத்தில் ஏழு எனெற் படித்தார்கள். இது போன்ற மாற்றங்கள் யாரால் உருவாக்கப்பட்டது ?

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே பெஸ்கி என்ற பாதிரியார் ஒருவர் இத்தாலி தேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தார். அவர் தமிழ் கற்றுக் கொண்டார். வீரமா முனிவர் என்று தமிழ்ப் பெயரும் வைத்துக் கொண்டார். அவர் செய்த மாறுதல்தான் இன்று நாம் காணும் எ ஏ ஒ ஓ எழுத்துகள்.

Thursday 5 September 2013

அடையாளம்

அடையாளம் - முனைவர் சீதா லட்சுமி

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஏதாவது காலக்கட்டத்தில் தேடுவது அவர்களது தத்தம் அடையாளங்களைத்தான்.

இன்று நான் படித்த முகநூல் கட்டுரை இந்த அடையாளத்தைப் பற்றியே தலைப்பாகக் கொண்டிருந்தது. எழுத்தாளர் முனைவர் சீதா லட்சுமி அவர்கள். அதனாலன்றோ அவரின் அடையாளம் மொழி சார்ந்தே எழுதப்பட்டிருந்தது.

அடையாளம் என்ற சொல்லில் பல அர்த்தங்களை நாம் காணலாம். இவர்களின் எழுத்தைப் படிக்கும் போது, திரு கண்ணப்பிரான் அவர்கள் எழுதிய நாடோடிகள் என்ற சிறுகதைதான் என் நினைவிற்கு வந்தது. மொழி, பண்பாட்டுச் சிதைவு ஏற்பட்டு மனிதர்கள் தத்தம் அடையாளங்களை இழந்து தேடலில் அலைவதே இன்று வளர்ந்து வரும் அவல நிலை.

பல குடும்பங்களில் இன்று தமிழைவிட ஆங்கில பேச்சே மதிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் நம் மொழி, தமிழன் என்பதே நம் அடையாளம் என்பதை வலியுறுத்தி இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் முனைவர் சீதா அவர்கள்.

நம் சிங்கையில் நாம் கட்டாயமாக பள்ளிகளில் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதால், இந்த மொழி, கலாச்சார சிதைவு விரைவில் நிகழக் கூடிய நிலைக்குத் தள்ளப்படப் போவதில்லை. அதற்குள் உலகம் முழுவதும் தமிழ்த் தாயே நவீனமயமாகக் காட்சியளித்திடுவாள்.

அதற்காக எப்பொழுதும் தமிழை எளிமைப்படுத்துவதும் சிறப்பான செயல் அல்ல. மொழியைக் காப்பாற்றுவதன் கடமை நம் கைகளிலே உள்ளது. இது நம் மொழி என்ற அந்த உணர்ச்சிகரமான எழுத்தை இதில் காணலாம்.

இவர் கூறிய இரண்டு செய்திகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. ஒன்று குழந்தைகள் தங்களது மழலைப் பேச்சில் பெற்றவர்களை அம்மா அப்பா என்று அழைப்பது. பிள்ளைகள் வாய் திறந்து தமிழ் பேசவில்லை என்பதால் அதற்குப் புரியவில்லை என்று தவறாக எண்ணுவதே ஆகும்.

தன் அடையாளத்தை குழந்தைகள் கண்டுபிடித்துப் புரிந்துகொள்வதே ஓர் இனிமையான அனுபவமாகும். தான் கொண்டாடும் பண்டிகைகள், அதன் காரணங்கள், பாட்டிக் கதைகள் என புது புது செய்திகளை உள்வாங்கிக் கொள்ள முடியும். அக்குழந்தையின் சிந்தனைத் திறனையும் மேலும் இவை வளமூட்டும் என நல்ல கருத்துகளை வெளிக்கொணர்ந்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி.

ஐஸ்வர்யா

Sunday 25 August 2013

உங்களுக்குத் தெரியுமா?

கண்களில் அடையாளம் காணலாம்

வேட்டையாடும் விலங்கு - வேட்டையாடப்படும் விலங்கு

புலி, நரி போன்ற வேட்டையாடும் விலங்குகளின் கண்கள் அவற்றின் முகத்தில் முன்பகுதியில் இருக்கும்.

- தங்கள் கண்களுக்கு முன்பு உள்ள மிருகத்தை மட்டுமே காண்பதற்கு

மான், முயல் போன்ற வேட்டையாடப்படும் விலங்குகளின் கண்கள் அவற்றின் தலையின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும். 

- எந்தத் திசையிலிருந்தும் எதிரி வந்தால், அவற்றால் பார்த்துத் தப்பித்து ஓட முடியும்.